மீனவர்கள் 5 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி!!
இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
6 மாவட்டங்களை சேர்ந்த மீனவப் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதாவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேற்று (18) சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது, மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி மனு ஒன்றை மீனவப் பிரதிநிதிகள் வெளியுறவு அமைச்சரிடம் வழங்கினர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது, ஆழ்கடல் மீன்பிடிப்பு தொடர்பான பிரச்சினைகளை களைய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
வெளியுறவு துறை அமைச்சருடனான இந்த சந்திப்பு, மீனவர்கள் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேல்முறையீட்டு மனு வாபஸ்?
இதனிடையே இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு திரும்பப் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அரசு அளித்த உறுதியின்பேரில், மனு வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
Average Rating