நிச்சயதார்த்தம் நடக்கவில்லை – பதறும் த்ரிஷா!!
‘லேசா லேசா’ சினிமாவில் அறிமுகமானவர் திரிஷா. கில்லி, சாமி, திருப்பாச்சி, கிரீடம், ஆறு, பீமா, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தற்போது அஜீத்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியுடன் நடித்த ‘பூலோகம்’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தனுசுடன் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக செய்திகள் வந்தன. இருவரும் பட விழாக்களில் ஜோடியாக பங்கேற்றார்கள். வெளிநாடுகளுக்கும் ஒன்றாக சென்று வந்தார்கள். ஆனால் திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
ராணாவுக்கு கன்னட நடிகையுடன் தொடர்பு இருந்ததால் திரிஷா சண்டை போட்டு விலகி விட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் திரிஷாவுக்கும் தமிழ் பட தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சென்னையில் நேற்று நிச்சயதார்த்தம் நடந்ததாக பரபரப்பு செய்தி வெளியானது. வருண்மணியன் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தை தயாரித்து உள்ளார். இதில் துல்சர் சல்மான், நஸ்ரியா நடித்து இருந்தனர்.
தற்போது சித்தார்த் நடிக்கும் ‘காவியத் தலைவன்’ படத்தை தயாரித்து வருகிறார். கட்டுமான தொழிலும் செய்து வருகிறார். இருவரும் ஏற்கனவே நட்பாக பழகி வந்தனர். விருந்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்கள். தற்போது இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை திரிஷா மறுத்தார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–
எனக்கு திருமண நிச்சய தார்த்தம் நடக்கவில்லை. நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தி வதந்திதான். இந்த வதந்தி எங்கிருந்து கிளம்பியது என்று தெரியவில்லை. என் திருமண நிச்சயதார்த்தம் என்பது என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளாக இருக்கும். அதை சந்தோஷமாக அறிவிக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்.
பாலகிருஷ்ணாவுடன் தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு அரக்கு வேலியில் நடந்தது. அந்த படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து கொண்டு இருந்த எனக்கு நிச்சயதார்த்தம் எப்படி நடந்து இருக்க முடியும். இவ்வாறு திரிஷா கூறினார்.
திரிஷா மறுத்தாலும் வருண்மணியனுடன் அவர் சேர்ந்து இருப்பது போல் வெளியாகியுள்ள படங்கள் சந்தேகத்தை கிளப்பி உள்ளன. நிச்சயதார்த்தம் இப்போது நடக்காவிட்டாலும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடப்பது உறுதி என்கின்றனர்.
Average Rating