திண்டுக்கல் அருகே மாணவியை அடித்ததாக ஆசிரியர் மீது புகார்!!
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள வேல்வார்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர், 10–ம் வகுப்பு மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது. கணித பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்த அந்த மாணவியை கண்டிப்பதற்காக அடித்ததாக அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு முன்பும், அந்த ஆசிரியர் மேலும் 2 மாணவர்களை அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின்பேரில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் பழனி மாவட்ட கல்வி அலுவலர் ஹெர்மித் ரிச்சார்ட் சிராப் விசாரணை மேற்கொண்டார்.
சம்பந்தப்பட்ட கணித ஆசிரியர் மீது மாணவர்கள், தலைமையாசிரியர்கள், பெற்றோர் – ஆசிரியர் கழக நிர்வாகிகளுக்கு திருப்தி ஏற்படாதபட்சத்தில், அவரை வேறு பள்ளிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் உறுதி அளித்துள்ளார்.
தற்போது புகாரில் சிக்கியுள்ள கணித ஆசிரியர், கன்னிவாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றியபோது எழுந்த புகாரின் அடிப்படையில் வேல்வார்கோட்டை பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Average Rating