பாளை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்றெடுத்த 16 வயது பள்ளி மாணவி!!
பாளை ராஜேந்திர நகரை சேர்ந்தவர் லதா (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பாளையில் உள்ள ஒரு மேல்நிலை பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.
இந்நிலையில் லதாவுக்கும் ராஜேந்திர நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமும் அனுபவித்து வந்தனர். இதன் காரணமாக லதா கர்ப்பமடைந்தார். ஆனால் அவருக்கு கர்ப்பமடைந்தது தெரியவில்லை. இதனால் பள்ளிக்கும் சென்று வந்தார்.
நேற்று காலை லதா திடீரென வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் லதாவை பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது நிறைமாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையறிந்த டாக்டர்கள் மற்றும் லதாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து பிரசவத்திற்காக அவர் அங்கு அனுமதிக்கப்பட்டார். இன்று காலை லதாவுக்கு குழந்தை பிறந்தது.
இது குறித்த தகவல் அறிந்ததும் பாளை போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் லதா தன்னை கர்ப்பமாக்கியது யார் என்பதை கூற மறுத்து விட்டார். தொடர்ந்து வற்புறுத்தினால் தற்கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினாராம். பெற்றோர் கேட்டு பார்த்தும் கூற மறுத்துவிட்டார். இருப்பினும் லதாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை பெற்றெடுத்த லதாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. குழந்தையும் வளர்ச்சியில்லாமல் உள்ளது. இதையடுத்து லதாவுக்கும், குழந்தைக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். 16 வயது பள்ளி மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating