பில்லி, சூனியம், மாந்திரீகத்தை ஒழிக்க சிறப்பு சட்டம்: கேரள உள்துறை தீர்மானம்!!
கேரள மாநிலத்தில் சமீபகாலமாக புதையல் எடுப்பதற்கு நரபலி கொடுப்பது, பில்லி, சூனியம் வைத்து பிறரை வசியப்படுத்தவும், கொல்லவும் முயற்சித்தல் போன்ற கொடும் குற்றங்கள் பெருகிக் கொண்டே வருகின்றது. *குடும்பத் தகராறு, குழந்தயின்மை போன்றவற்றுக்கு கூட மாந்திரீகத்தின் மூலம் தீர்வு காண சிலர் முயற்சிப்பதால், இதன் காரணமான உயிரிழப்புகளும் தற்போது அதிகரித்துள்ளது.
இதில் பலியாவது பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர். சமீபத்தில், ‘பேய் ஓட்டுகிறேன்’ என்று கொடுமைப்படுத்தப்பட்டதால் கொல்லம் பகுதியில் ஒரு பெண்ணும், பத்தனம்திட்டா பகுதியில் மற்றொரு பெண்ணும் பில்லி, சூனியத்துக்கு பலியானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பில்லி, சூனியம், மாந்திரீகத்தை ஒழிக்க சமீபத்தில் மராட்டிய மாநில அரசால் மிகக் கடுமையான சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தில் உள்ள சாராம்சங்களை வைத்து, இதேபோன்றதொரு வலுவான சட்டத்தை இயற்றி மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக, வரைவு சட்டம் ஒன்றை இயற்றும்படி, தனது துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு கேரள மாநில உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதாலா உத்தரவிட்டுள்ளார்.
இந்த சட்ட முன்வரைவு கேரள சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில கவர்னர் ஆகியோரின் ஒப்புதலை பெற்ற பின்னர், விரைவில் இந்த புதிய சட்டம் மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது.
Average Rating