சேத்தியாத்தோப்பில் 16 வயது பெண் திருமணம் நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை!!
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த சின்னகோட்டிமுளையை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகள் பேபி சுந்தரி (வயது 16). இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த பூவராகவன் (24). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
பூவராகவனுக்கும், பேபி சுந்தரிக்கும் கடந்த 1 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் சேத்தியாத்தோப்பில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து கல்யாண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. நேற்று இரவு கல்யாண மண்டபத்தில் மணமகள் அழைப்பு விமரிசையாக நடந்தது.
இருவீட்டார் மற்றும் உறவினர்கள் சந்தோஷத்துடன், உற்சாகத்துடனும் மண்டபத்தில் பேசி கொண்டிருந்தனர். 18 வயது நிறைவடையாத பேபி சுந்தரிக்கு திருமணம் நடப்பதாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
உடனே கடலூர் மாவட்ட சமூக நல அலுலவர் புவனேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் அந்த மண்டபத்துக்கு விரைந்து வந்தனர். மணமகளிடம் விசாரித்தபோது அந்த பெண்ணுக்கு 16 வயது மட்டுமே பூர்த்தியாகியிருப்பது தெரிய வந்தது. எனவே சட்டவிரோதமாக திருமணம் நடத்துவது தவறு என மாப்பிள்ளை–பெண் வீட்டாரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர். பிறகு இன்று நடைபெற இருந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மணப்பெண் பேபி சுந்தரியை அதிகாரிகள் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திடீரென திருமணம் நின்றதால் கல்யாண மண்டபம் களை இழந்தது. மாப்பிள்ளை–பெண் வீட்டார், உறவினர்கள் சோகத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள்.
16 வயது பெண்ணுக்கு நடைபெற இருந்த திருமணம் திடீரென நிறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating