சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. கண் எதிரே சுங்கச்சாவடி ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்!!
உத்தரப்பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வின் கண் எதிரிலேயே அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சுங்கச்சாவடி ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கொசைன்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர், அபய் சிங். தலைநகர் லக்னோவை நோக்கி இவர் நேற்று காரில் சென்றார்.
அஹமத்பூர் அருகேயுள்ள சுங்கச்சாவடியின் அருகே, சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக முன்னால் சில வாகனங்கள் நின்றிருந்ததால் எம்.எல்.ஏ.வின் காரும் அங்கே நின்றது. எம்.எல்.ஏ.வுடன் வந்த இதர கார்களில் ஒன்று, தவறான நுழைவு வாயிலுக்குள் புகுந்து சுங்கச்சாவடியை கடந்து சென்று நின்றது.
இதனால், சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் மூண்டது. இதற்கிடையில், எம்.எல்.ஏ.வுக்கு பாதுகாப்பாக பின்னால் வந்த மேலும் 3 கார்கள் அங்கு வந்து சேர்ந்தன.
அதில் இருந்து இறங்கிய பலர் சுங்கச்சாவடி பணியாளர்களில் ஒருவரை பிடித்துக் கொண்டனர். இன்னொருவர் ஒரு நீண்ட தடியை எடுத்து மாட்டை அடிப்பதுப் போல் அந்தப் பணியாளரை அடித்து, துவைத்தார்.
இத்தனை களேபரமும் சமாஜ்வாதி எம்.எல்.ஏ அபய் சிங்கின் கண்ணெதிரே நடந்தபோதிலும், அவர் வெறுமனே வேடிக்கை பார்த்து ரசித்தபடியும், தங்களது கட்சியினரின் ‘வீரதீர பிரதாபங்களை’ வியந்தபடியும் தனது ‘ஸ்கார்ப்பியோ’ காரில் மவுன சாட்சியாக அமர்ந்திருந்தார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி, சுங்கக்கட்டணம் செலுத்தாமல் ஏராளமான வாகனங்கள் அவ்வழியை கடந்து செல்வதும் அதில் பதிவாகியுள்ளது.
இந்தப் பதிவுகளை எல்லாம் வட மாநில ஊடகங்கள் தற்போது தொடர்ந்து ஒளிபரப்பி வருவதால், உ.பி.யில் ஆளுங்கட்சியினரின் அட்டூழியத்தைக் கண்டு சமூக ஆர்வலர்களும், மனிதாபிமானம் மிக்கவர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
Average Rating