ம.ம.மு ஜனாதிபதிக்கு வழங்கிய ஆதரவு மீள்பரிசீலனை!!
ஜனாதிபதிக்கு கொடுத்த ஆதரவை பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் ஏ.லோரண்ஸ் தெரிவித்தார்.
இன்று (23) ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் இருந்த காலத்திலும் சரி இன்றும் சரி என்றும் சரி முக்கியமான தேர்தல் காலத்திலேயே நாங்கள் பாரிய பங்களிப்பை செய்திருக்கின்றோம். நாங்கள் சிந்தித்து பார்த்து தான் ஆதரவு கொடுப்போம்.
மக்களின் பிரச்சினைகளை முக்கியப்படுத்தி தான் ஆதரவு கொடுப்போம். அந்தவகையில் மலையக மக்கள் 200 வருடகாலமாக இன்னும் லயன் குடியிருப்புக்களிலேயே இருக்கின்றார்கள். இந்த லயன் முறையை மாற்றி காணி உரிமையோடு தனித் தனி வீடுகள் கட்டியமைப்பது தலைவர் சந்திரசேகரனின் கனவு.
தற்போது அரசியல் ரீதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் கூறிய ஆதரவை மீண்டும் சிந்திக்க வேண்டியுள்ளது. இருக்கின்ற அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதா அல்லது வேறு தீர்மானத்தை எடுப்பதா என்று சிந்திக்க வேண்டியிருக்கின்றது.
இங்கு ஏற்பட்டுள்ள அரசாங்க மாற்றத்தினாலேயே இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சில கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்திருந்தாலும் நாங்கள் ஜனாதிபதியிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்திருந்தோம்.
ஆனால் இங்கு ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலேயே சிந்தித்து பார்க்க வேண்டிய நிலைமையுள்ளது. என அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து, மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான ராதாகிருஷ்ணனிடம் அத தெரண வினவியபோது, இது குறித்த கட்சியின் சந்திப்பு தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும், ஜனாதிபதிக்கு வழங்கிய ஆதரவை மீள்பரிசீலனை செய்யவுள்ளதாகவும் உறுதிப்படுத்தினார்.
எனினும் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Average Rating