ஒன்றரை மாத ஆண் குழந்தையை விட்டு சென்ற பெண் யார்?: சி.சி.டி.வி கேமரா மூலம் போலீசார் ஆய்வு!!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை 2 மணியளவில் சிகிச்சைக்காக காத்திருந்த மூதாட்டியின் அருகில் வந்த ஒரு பெண் கையில் உள்ள குழந்தையை பக்கத்தில் உள்ள பெட்டியில் படுக்க வைத்துவிட்டு கொஞ்சநேரம் பார்த்துக்கொள்ளுங்கள் நான் மாத்திரை வாங்கி வந்துவிடுகிறேன் என சொல்லிவிட்டு சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் அந்த குழந்தை அழுதது. உடனே அந்த மூதாட்டி மாத்திரை வாங்க சென்ற பெண்ணை மருத்துவமனை முழுவதும் தேடியும் காணவில்லை. இதனால் மூதாட்டி மருத்துவமனை செவிலியர்களிடம் விஷயத்தை கூறினார். செவிலியர்கள் அப்போதைய பணி டாக்டர் மதியழகனிடம் தகவல் கொடுத்தனர். டாக்டர் வந்து குழந்தையை பரிசோதித்து பார்த்தபோது குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்தார்.
தகவலறிந்த தாசில்தார் திருமாறன், வருவாய் ஆய்வாளர் சம்பத், வி.ஏ.ஓ. பொய்யாமொழி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்–இன்ஸ்பெக்டர் ரபீக் உசேன் ஆகியோர் மருத்துவமனையில் அமைந்துள்ள கேமராவின் பதிவை பார்த்த பொழுது, மதியம் 2 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்து இருவர் மருத்துவமனைக்கு உள்ளே சென்றதும், அந்த பெண் மட்டும் சென்று குழந்தையை பெட்டியில் போட்டது முதல் தெரிகிறது. ஆனால் கேமராவில் உருவம் சரிவர தெரியாததால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
குழந்தை அழுதுகொண்டே இருந்தது. செவிலியர்கள் அந்த குழந்தையை தூக்கி வந்து அதற்கு புதிய உடை வாங்கி போட்டு சிரிப்பு காட்டி பார்த்தார்கள். குழந்தை அழுவதை நிறுத்தாததால் பக்கத்து பெட்டியில் பிரசவித்திருந்த ஒரு பெண் அந்த குழந்தையை தூக்கி பாலூட்டியதும் குழந்தை அழுவதை நிறுத்தி விட்டது. மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் அனைவரும் அந்த பெண்ணை பாராட்டினார்கள். இந்த சம்பவத்தால் மருத்துவனை மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியே ஒரே பரபரப்பாக காணப்பட்டது.
Average Rating