60 பவுன் தங்க நகைகளை கடத்திச் சென்ற இலங்கையர் சென்னையில் கைது!!
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு 60 பவுன் தங்க நகைகளை கடத்திச் சென்ற ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை கொழும்பில் இருந்து ஒரு விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த அகமது அனுப் (வயது 23) என்பவர் சுற்றுலா விசாவில் வந்திருந்தார்.
இவர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் வெள்ளி முலாம் பூசப்பட்ட நகைகள் இருந்தன. இவை கவரிங் நகைகள் என்றும் சென்னையில் விற்க கொண்டு வருவதாக கூறினார். ஆனால் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அந்த நகைகளை பரிசோதனை செய்து பார்த்தனர்.
அப்போது தங்க நகைகள் மீது வெள்ளி முலாம் பூசப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவர் மொத்தம் 60 பவுன் தங்க நகைகள் கடத்தி வந்துள்ளார். இவற்றின் மதிப்பு இந்திய ரூ.14 லட்சத்து 50 ஆயிரம்.
இது தொடர்பாக இலங்கை வாலிபர் அகமது அனுப்பை கைதுசெய்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating