புதுவண்ணாரப்பேட்டையில் தனியார் ஆஸ்பத்திரியில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளை!!
புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு அதே பகுதி பூண்டி தங்கம்மாள் தெருவில் வசித்து வரும் பட்டம்மாள் (68) துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தினமும் அதிகாலையில் ஆஸ்பத்திரியை சுத்தம் செய்வது வழக்கம்.
இன்று காலை 7 மணியளவில் பட்டம்மாள் ஆஸ்பத்திரியை திறந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது மற்ற தொழிலாளர்கள் இல்லை.
சிறிது நேரத்தில் 3 வாலிபர்கள் நைசாக ஆஸ்பத்திரிக்குள் புகுந்தனர். அவர்கள் பட்டம்மாளை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்து இருந்த 10 பவுன் நகையை பறித்தனர்.
பின்னர் அவரை தாக்கி அறைக்குள் தள்ளி கை, கால்களை கயிற்றால் கட்டினர். மேலும், வாய்க்குகள் துணியை வைத்து அமுக்கி தப்பி சென்றுவிட்டனர்.
நீண்ட நேரத்துக்கு பிறகு வாயில் இருந்த துணியை கீழே துப்பி விட்டு பட்டம்மாள் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பார்த்தபோது கை, கால் கட்டப்பட்ட நிலையில் பட்டம்மாள் தரையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு கேமரா இல்லை. இதனால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஆஸ்பத்திரி எதிரே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அங்கு கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அதிகாலையில் பட்டம்மாள் தனியாக வேலைக்கு வருவதை நோட்டமிட்டு மர்ம கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே, இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த ஆசாமிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
ஆஸ்பத்திரியில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating