மும்பையில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் 59 சதவிகிதம் உயர்வு: கற்பழிப்பு சம்பவங்கள் 47 சதவிகிதம் அதிகரிப்பு!!
மும்பையில் பெண்களுக்கு எதிரான குற்றம் 59 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம் வெளிவந்துள்ளது.
ஏப்ரல் 2013 முதல் மார்ச் 2014 வரை உள்ள ஒரு வருட காலத்தில் நடைபெற்ற குற்றங்களை கணக்கிட்டதில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. அதே சமயம் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 8 சதவிகிதம் பேருக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த தன்னார்வலரான ப்ரஜா தொகுத்துள்ள விவரங்களை வைத்து பார்க்கையில் போலீஸ்துறையில் ஆட்கள் குறைவாக இருப்பதும், வேலைப்பளு அதிகம் காரணமாக குற்றவாளிகளுக்கான தண்டனைகளை பெற்றுத்தருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தள்ளது.
மும்பை நகரத்தில் வசிக்கும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தாங்கள் பாதுகாப்பில்லாமல் வசிப்பதாக கருதுகின்றனர் என ப்ரஜா நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அவருடன் இணைந்து ஆய்வு நடத்தியவர்கள் மும்பையில் வசிக்கும் 22580 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தினர். அதில் 32 சதவிகிதம் பேர் தாங்கள் பாதுகாப்பில்லாமல் வசிப்பதாக தெரிவித்தனர். அதே போல் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது பாதுகாப்பில்லாமல் இருப்பதாக 36 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.
கடந்த வருடம் கற்பழிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 294 இருந்த நிலையில், இந்த வருடம் அது 432 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் மானபங்கப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 793லிருந்து 1209 ஆகவும், செயின் பறிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 1269லிருந்து 2110 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம் கொலை குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது சற்று ஆறுதல் தருகிறது. கடந்த வருடம் 202 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வருடம் அந்த எண்ணிக்கை 171 ஆக குறைந்துள்ளது. வாகன திருட்டு தொடர்பான குற்றங்களும் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating