காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல்!!
பூதலூர் தோகூர் காமராஜர் நகரில் வசிக்கும் திருஞானம் என்பவரின் மகள் திவ்யா (20) கூலி தொழிலாளி. இவரும் திருச்சிமாவட்டம் பூவாளூரில் வசித்துவரும் காமராஜ் என்பவரின் மகன் இளையராஜா (21) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். அவர்கள் நெருங்கி பழகியதால் திவ்யா கர்ப்பமானார்.
இவர்களது காதல் விவகாரம் அறிந்த திவ்யாவின் தாயார் கலா தோகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் திவ்யாவையும் அவரது காதலர் இளையராஜாவையும் போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். மேலும் திவ்யாவை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தும்படி இளையராஜாவுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இதன்படி திவ்யாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருவையாறு மேலவீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தின் முன்னர் இளையராஜா தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். அன்றிலிருந்து திவ்யாவின் பெற்றோர் வீட்டிலேயே தங்கி குடும்பம் நடத்தி உள்ளார்.
இந்நிலையில் இளையராஜாவின் பெற்றோரான காமராஜ் மற்றும் கற்பகம் ஆகியோர் திவ்யாவை அவரது கணவர் இளையராஜவுடன் வாழ அனுமதிக்க முடியாது என்றும், இதை மீறி தகராறு செய்தால் திவ்யாவை கொலை செய்துவிடுவதாகவும் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் தமது மகன் இளையராஜாவை அழைத்துக்கொண்டு வெளி ஊர் சென்றுவிட்டார்கள்.
இதுபற்றி திவ்யா திருவையாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் துர்கா, சப்–இன்ஸ்பெக்டர் வனஜா, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள கணவர் உள்பட 3 பேரை தேடிவருகிறார்கள்.
Average Rating