பாகிஸ்தானில் கிறிஸ்தவப்பெண்ணை கற்பழித்த 4 முஸ்லிம்களுக்கு தூக்கு தண்டனை
பாகிஸ்தானில் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவப் பெண்ணை துப்பாக்கி முனையில் கற்பழித்த முஸ்லிம்கள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை நேற்று மாலை நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தானில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்து வந்தபோதிலும் கிறிஸ்தவர்கள் மிகக்குறைந்த அளவில் வசித்து வருகிறார்கள். முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வாடிக்கை. ஒரு கிறிஸ்தவப்பெண்ணை 7 ஆண்டுகளுக்கு முன்பு பைசலாபாத் நகரில் 4 பேர் துப்பாக்கியைக்காட்டி கற்பழித்து விட்டனர். 4 பேர் அல்லது 5 பேர் சேர்ந்து கூட்டமாக கற்பழிப்பது பாகிஸ்தானில் அதிக அளவில் நடக்கும் ஒன்றாகும். கடந்த ஆண்டு மட்டும் 207 பெண்கள் கூட்டமாக கற்பழிக்கப்பட்டு உள்ளனர்.
பைசலாபாத்தில் கிறிஸ்தவப்பெண்ணை கற்பழித்த 4 முஸ்லிம்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பைசலாபாத்தில் உள்ள தீவிரவாதத்தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் அதிபர் முஷரப்புக்கு கருணைமனு அனுப்பினர். இந்த மனுவை அதிபர் முஷரப் ஏற்க மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து இந்த 4 பேருக்கும் நேற்று தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது. பைசலாபாத் நகரில் உள்ள சிறையில் மாலை 4.30 மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
தூக்கு தண்டனையை பொதுமன்னிப்புச்சபை எதிர்த்து வருகிறது. பாகிஸ்தானில் கடந்த ஆண்டு மட்டும் 241 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் 32 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.