நாகர்கோவில் அருகே இளம் காதல் ஜோடி தற்கொலை முயற்சி!!
பூதப்பாண்டி அருகே உள்ள அரசன்குழியை சேர்ந்தவர் தயாளன் (வயது28). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் லேப் டெக்னீசியனாக வேலை பார்க்கிறார்.
இதே ஆஸ்பத்திரியில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் ஆரல்வாய்மொழி திருமலாபுரத்தை சேர்ந்த தேவிகா(24) வேலை பார்க்கிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களது காதல் விவரம் அரசல் புரசலாக பெற்றோருக்கு தெரியவந்தது. தேவிகாவின் காதலை கடுமையாக எதிர்த்த அவரது பெற்றோர் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறினர். இதனால் தேவிகா தனது காதலனை பார்க்க முடியாமல் தவித்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அங்கிருந்து வெளியேறிய தேவிகா தனது காதலனை சந்தித்தார். இருவரும் பீமநகரி பெரியபாலம் அருகே இருந்து பேசிக்கொண்டிருந்தனர்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர் நம்மை சேர்ந்து வாழ விட்டார்கள் என கருதிய காதல் ஜோடி ஒன்றாக சேர்ந்து சாகலாம் என முடிவு செய்து அரளி காய்களை அரைத்து சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் இளம் காதல் ஜோடி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், காதல் ஜோடியை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறும் போது, 2 அரளிக்காய்கள் சாப்பிட்டாலே இதயத்தை செயலிழக்க செய்து விடும். இவர்கள் 6 காய்களை சாப்பிட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் 48 மணி நேரம் கழித்த பின்னரே எதுவும் சொல்ல முடியும் என்றனர். இந்த சம்பவம் பற்றி ஆரல்வாய் மொழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating