மனைவி – குழந்தையை தவிக்கவிட்டு 2–வது திருமணம் செய்த கணவர் கைது!!
அயனாவரம் ஏகாங்கிபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் உமாபதி (40). தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி (35). இவர்களுக்கு திருமணம் நடந்து 9 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.
உமாபதி பாரிமுனையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள செண்பகவள்ளி (40) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
சமீபத்தில் செண்பக வள்ளியை உமாபதி 2–வது திருமணம் செய்து கொண்டார். தண்டையார்பேட்டையில் அவருடன் தனிக்குடித்தனம் நடத்தினார்.
இதை அறிந்த விஜயலட்சுமி கணவரை தன்னுடன் சேர்ந்து வாழும்படி வற்புறுத்தினார். உமாபதி, விஜயலட்சுமி, செண்பகவள்ளி ஆகியோர் பங்கேற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உமாபதி–விஜயலட்சுமி தம்பதியரை ஒன்று சேர்க்க முயற்சி நடந்தது.
ஆனால், உமாபதி அவரது முதல் மனைவியுடன் வாழ முடியாது என்று கூறி விட்டார். 2–வது மனைவி செண்பகவள்ளியுடன் தான் வாழ்வேன். இதை யாரும் தடுக்க முடியாது என்று சவால் விட்டார்.
இதையடுத்து விஜயலட்சுமி தனது கணவர் உமாபதி, 2–வது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் மீது புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பெண் இன்ஸ்பெக்டர் சுசிலா பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உமாபதியை கைது செய்தார்.
செண்பகவள்ளி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தலைமறைவான அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating