மதுரையில் தலைமை ஆசிரியை கடத்தி கொலை!!
மதுரை ரிங் ரோடு பகுதியில் கல்லம்பல் பாலம் உள்ளது. இதன் அருகே இன்று காலை நடந்து சென்றவர்கள், அங்கு சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் உடல் கிடப்பதை கண்டனர்.
இதுகுறித்து சிலைமான் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவரின் முகத்தில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.
மேலும் பெண்ணின் கழுத்தில் கயிறு இறுக்கிய தடம் காணப்பட்டது. இதனால் அவரை யாராவது கடத்தி வந்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதினர்.
பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய போலீசார் கொலையான பெண் யார? என தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், அவரது பெயர் விவரம் தெரியவந்தது கொலை செய்யப்பட்டவர் மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த மனுவல்ராஜன் என்பவரது மனைவி பிரகாசி அம்மாள் (வயது 72). கணவன்–மனைவி இருவரும் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.
நேற்று மாலை அண்ணாநகரில் உள்ள சர்ச்சுக்கு சென்று வருவதாக கூறி விட்டு, பிரகாசி அம்மாள் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர், கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேவாலயம் செல்லும்போது, பிரகாசி அம்மாள் 20 பவுன் நகை அணிந்து சென்றாராம்.
தற்போது அவரது உடலில் அந்த நகைகள் இல்லை. எனவே நகைக்காக மர்ம மனிதர்கள், அவரை கடத்தி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Average Rating