பெரும்பாலான சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்ஷ மீது வெறுப்பில்!!
நாட்டில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி பெரும்பாலான சிங்கள மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் வெறுப்பில் உள்ளதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ´தி ஹிந்து´ பத்திரிகைக்கு அளித்த விசேட செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொலிஸ் சேவை தொடக்கம் நீதிமன்றம் வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காணப்படுவதாகவும் அதனால் ஊழல், குற்றம் புரிபவர்கள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுவதால் மக்கள் அதன்மூலம் பாதிப்படைவதாகவும் சோபித்த தேரர் கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினால் இந்நாட்டின் ஜனநாயகம், சட்டம் மற்றும் நல்லாட்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதால் வலுவான பொறிமுறையின் கீழ் அரசியல் யாப்பு மாற்றம் செய்யப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை தற்போதைய அரசாங்கம் ஏற்க மறுப்பு தெரிவித்ததால் தான் உள்ளிட்ட சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க போன்ற குழுவினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்கத் தீர்மானித்ததாக சோபித்த தேரர் கூறியுள்ளார்.
சிரேஸ்ட பிக்குகள் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து நிற்பதால் அவரால் நினைத்த அளவு சிங்கள – பௌத்த வாக்குகளைப் பெற முடியாது என சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலைமையில் தமிழ் மக்களின் வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைக்க வாய்ப்புள்ளதென தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு விடயத்தில் தமிழர்களின் வாக்கு தீர்மானிக்கக் கூடிய ஒன்று என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற தெரிவுக் குழு ஊடாக தமிழ் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்களின் பிரச்சினைகளுக்கு மாத்திரமன்றி தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கும் அரசாங்கம் ஒன்று அவசியம் என தேரர் தெரிவித்துள்ளார்.
Average Rating