தந்தையை இழந்த 111 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி!!
குஜராத் மாநிலம் சூரத்தில் வைரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மிகப்பெரிய தொழிலதிபரான மகேஷ் சவானி, தந்தையை இழந்த 111 பெண்களுக்கு வளர்ப்பு தந்தையாக நின்று திருமணம் செய்து வைத்துள்ளார்.
சூரத் அருகேயுள்ள மோடா வார்ச்சா பகுதியில், விவசாய பண்ணை ஒன்றில் இந்த கோலாகல திருமண வைபவம் நடைபெற்றது. இந்த 111 பேரில் தந்தையை இழந்த மூன்று இஸ்லாமிய பெண்களும் அடங்குவார்கள். இது குறித்து அவர் கூறுகையில்;
“நான் இன்று 111 பெண்களுக்கும் வளர்ப்பு தந்தையாக நிற்பதில் பெருமை கொள்கிறேன். நானும் எனது சகோதரர் ராஜூ பாயும் இணைந்து தந்தையை இழந்த, இந்த 111 பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தோம். இதில் மூவர் இஸ்லாமிய பெண்கள் ஆவார்கள். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இது போன்ற திருமணங்களை நாங்கள் நடத்தி வருகிறோம். இதுவரை வளர்ப்பு தந்தையாக நின்று 251 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளேன்” என்று சவானி கூறினார்.
திருமணம் செய்து வைத்ததோடு தனது பணியை அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. திருமணம் முடிந்த கையாடு பெண்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள், பாத்திரங்கள், மின்சாதன பொருட்கள் மற்றும் துணிமணிகளையும் வழங்கி அவர்கள் கௌரவமாக வாழ வழிவகை செய்துள்ளார். திருமணத்திற்கு பின் அப்பெண்களின் மகப்பேறு கால சிகிச்சைக்கான செலவையும் சவானியே ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Average Rating