புலிகள் மீது தாக்குதல் நடத்துவோம்’ கருணாஅமைப்பு அறிவிப்பு
`விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவோம்’ என்று கருணா அமைப்பினர் அறிவித்து உள்ளனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இரு தரப்பினருக்கும் இடையே எந்த நேரத்திலும் முழு அளவிலான போர் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று இலங்கையின் கிழக்கு பகுதியில் தனி அணியாக செயல்படும் கருணாஅமைப்பினரும் விடுதலைப்புலிகளும் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. கருணாஅமைப்புக்கு இலங்கை ராணுவம் ஆதரவாக இருப்பதாக விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டி உள்ளனர். கருணா இருந்து ராணுவம் ஆயுதங்களை பறிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இலங்கை அரசோ தாங்கள் கருணா ஆதரவாளர்களுக்கு உதவி செய்யவில்லை என்று கூறியதோடு அவர்களிடம் இருக்கும் ஆயுதங்களை பறிக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது விடுதலைப்புலிகளுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையின் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் கருணா ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதில் இரு தரப்பிலும் உயிர் இழப்பும் ஏற்படுகிறது. கண்கள் அல்லது கைகள் கட்டப்பட்ட நிலையில் மட்டக்களப்பு பகுதியில் சாலை ஓரத்தில் பிணங்கள் கிடப்பது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று கருணாஅமைப்பினர்் அறிவித்து உள்ளனர். இதுபற்றி அந்த அமைப்பைச் சேர்ந்த பிரதீப் மட்டக்களப்பில் நிருபர்களிடம் கூறியதாவது:-
விடுதலைப்புலிகள் இயக்க தலைமையின் எதேச்சதிகார போக்குக்கு முடிவு கட்டாமல் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முடியாது. ஆனால் எங்களால் அது முடியும். இந்த விஷயத்தில் நாங்கள் படிப்படியாக செயல்படுவோம். எங்களுக்கு ராணுவத்தின் உதவி தேவை இல்லை.
விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேதான் போர் நிறுத்த ஒப்பந்தம் உள்ளது. எங்களுக்கு அதில் சம்பந்தம் இல்லை. எங்களுடைய முகாம்களை பாதுகாக்க நாங்கள் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தித்தான் ஆக வேண்டும். அப்படி தாக்குதல் நடத்துவதை போர் நிறுத்தத்தை சீர்குலைப்பதாகவோ, போருக்கு வழிவகுப்பதாகவோ கருத முடியாது.
கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து இதுவரை நாங்கள் நடத்திய தாக்குதலில் 230 விடுதலைப்புலிகள் பலியாகி உள்ளனர். எங்கள் தரப்பில் 57 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.
இவ்வாறு பிரதீப் கூறினார்.