இந்தியாவில் புதிய எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 57 சதவீதம் சரிந்தது!!
உலகளாவிய அளவில் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அதிகம் வாழும் மூன்றாவது நாடான இந்தியாவில் உயிர்க் கொல்லியான எய்ட்ஸ் நோயால் புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 57 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலக எய்ட்ஸ் தினமான இன்று தலைநகர் டெல்லியில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரை உள்ளிட்டவைகளை சப்ளை செய்வது தொடர்பாக ’1097’ என்ற இலவச தொலைபேசி உதவி சேவையை தொடங்கி வைத்த மத்திய சுகாதார மந்திரி நட்டா, ‘நமது எய்ட்ஸ் நோயால் புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 57 சதவீதம் வரை குறைந்துள்ளது. இது போதாது. இது 100 சதவீதமாக குறையும் வரை நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி விடாமல், அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இந்நோயில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் தடுப்பு முறைகளிலும், நமது வாழ்வியல் முறையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சுமார் 125 கோடி மக்களை கொண்ட நம் நாட்டில் முதன்முதலாக 1986-ம் ஆண்டு சென்னையில் இருந்த பாலியல் தொழிலாளி ஒருவருக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் எய்ட்ஸ் சார்ந்த மரணங்கள் 30 சதவீதம் வரை குறைந்துள்ள வேளையிலும், தற்போது இந்நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 21 லட்சம் பேர் இங்கு வாழ்கின்றனர்.
கடந்த 28 ஆண்டு காலமாக மத்திய-மாநில அரசுகளும் தனியார் தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து செய்துவரும் விழிப்புணர்வு பிரசாரத்தின் பலனாக எய்ட்ஸ் நோயால் புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 57 சதவீதம் வரை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating