காஞ்சீபுரம் அருகே ஏரியில் மிதந்த இளம்பெண் பிணம்: போலீசார் விசாரணை!!
காஞ்சீபுரம் அருகே வாலாஜாபாத் – படப்பை சாலையில் நத்தம் பகுதியில் பூதேவி ஏரி உள்ளது. அந்த ஏரியை கடந்து அந்த பகுதி மக்கள் இன்று காலை நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஏரிக்கரை ஓரத்தில் இளம்பெண் ஒருவரது உடல் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி அவர்கள் கிராம அதிகாரி ஏழுமலைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வாலாஜாபாத் போலீசாருக்கு இதுபற்றி தெரிய வந்தது. அதன் பேரில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் முரளி சம்பவ இடத்துக்கு சென்று விரைந்து சென்றனர். ஏரியில் மிதந்தபடி கிடந்த இளம்பெண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அந்த பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும். திருமணம் ஆனவர்.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இந்த ஏரிப்பகுதிக்கு வந்தார்? என்பது போன்ற எந்த தகவலும் தெரியவில்லை. அவரை யாராவது கடத்தி வந்து கொலை செய்து, ஏரியில் உடலை வீசி விட்டு சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலும் தகவல்களை அறிய அந்த பெண்ணின் உடல் காஞ்சீபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு நடத்தப்படும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு புதிய தகவல்கள் ஏதேனும் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating