ஊத்துக்குளி அருகே 9–ம் வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கரைப்பாளையம் புதுக்காலனியை சேர்ந்தவரின் 13 வயது மகளுக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய வாலிபருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த பெண் அங்குள்ள அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களது திருமணம் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இன்று நடப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் மணமக்களின் பெற்றோர்களும், உறவினர்களும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.
நேற்று இரவும், இன்று காலையும் உறவினர்களுக்கு தடபுடலாக விருந்து அளிக்கப்பட்டது. இதற்கிடையே 13 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தப்படும் தகவல் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. எனவே அவர்கள் திருமணத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் இறங்கினர்.
இன்று காலை மணமகள் வீட்டில் காலை விருந்து அளிக்கப்பட்டு, பின்னர் கோவிலுக்கு சென்று திருமணம் முடிக்க பெற்றோரும், உறவினர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
காலை 8.50 மணி அளவில் ஊத்துக்குளி தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், கிராம நிர்வாக அதிகாரி வின்சென்ட் தியாகராஜன் மற்றும் ஊத்துக்குளி போலீசார் மணமகளின் வீட்டிற்கு சென்றனர்.
மணமகளுக்கு இன்னமும் 18 வயது நிரம்பவில்லை. எனவே அவருக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே இந்த திருமணத்தை தடுத்து நிறுத்துகிறோம். 18 வயது நிரம்பிய பின்னர் பெண்ணுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று அவர்கள் மணமகளின் பெற்றோரிடம் கூறினர். இதை தொடர்ந்து திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மணமகளின் பெற்றோரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தியதால் மணமகள் வீட்டில் பரபரப்பு நிலவியது. திருமணத்திற்காக வந்திருந்த உறவினர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
Average Rating