காதலிக்க மறுத்த இளம்பெண் முகத்தில் ஆசிட் வீசுவதாக மிரட்டல்: விற்பனை பிரதிநிதி கைது!!
புதுவை லாஸ்பேட்டை பாரதி வீதியை சேர்ந்தவர் சேகர், அரசு ஊழியர். இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 23). எம்.பி.ஏ. பட்டதாரி.
இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி நிலையம் சென்று பயிற்சிகள் செய்து வந்தார். அங்கு கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த அழகுசாதன பொருட்கள் விற்பனை பிரதிநிதி சிவசந்திரனும் (27) உடற்பயிற்சி செய்து வந்தார்.
ஜெயஸ்ரீயின் அழகில் அவர் மயங்கினார். அந்த பெண்ணை ஒருதலையாக காதலிக்க தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக ஜெயஸ்ரீயின் செல்போன் எண்ணை நூதனமாக தெரிந்து கொண்டார். தன்னை காதலிக்க கூறி அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.
இந்த தொல்லையால் அதிர்ச்சியடைந்த ஜெயஸ்ரீ தனது செல்போன் எண்ணை மாற்றினார். ஆனால் அதனையும் சாதுர்யமாக தெரிந்து கொண்ட சிவசந்திரன் மீண்டும் வாலாட்ட தொடங்கினார். எனினும் ஜெயஸ்ரீ அந்த வாலிபரை ஏறிட்டு பார்க்கவில்லை.
இதனால் சிவசந்திரன் ஆத்திரமடைந்தார். அந்த பெண்ணின் வீட்டுக்கு துணிவுடன் நேரில் சென்றார். அவரை கண்டு திடுக்கிட்ட ஜெயஸ்ரீயிடம் ‘என்னை காதலித்தால் திருமணம் செய்து கொள்கிறேன். காதலிக்க மறுத்தால் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன்’ என்று அவர் மிரட்டியதாக தெரிகிறது.
இந்த சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த ஜெயஸ்ரீயின் தந்தை சேகர் விரைந்து வந்தார். தனது மகளை மிரட்டிய சிவசந்திரனை தட்டிக்கேட்டார். உடனே அவருக்கும் அந்த வாலிபர் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
இதுபற்றி லாஸ்பேட்டை போலீசில் ஜெயஸ்ரீ தரப்பில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசந்திரனை கைது செய்தனர்.
Average Rating