கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பெற்றவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக சான்று!!
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள பெருமாள் அகரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேல் (வயது 35), கார் டிரைவர். இவரது மனைவி ஜெயந்தி. கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஜெயந்தி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த மாதம் 11–ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சுபஸ்ரீ என பெயர் சூட்டப்பட்டது.
இந்நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இருந்து ஜெயந்திக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு பதிவு செய்யும் இடத்தில் பதிந்துவிட்டு சிங்காரவேல் வாங்கி சென்றார். வீட்டுக்கு சென்று சான்றிதழை பார்த்தபோது பெண் குழந்தைக்கு பதில் ஆண் குழந்தை என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து பெற்றோர் அந்த சான்றிதழை எடுத்து வந்து கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் கொடுத்து தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
அப்போது அங்குள்ள பணியாளர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாக சான்றிதழ் வழங்கியுள்ள விபரத்தை தெரிவித்தார்.
அதன் பிறகு அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரகுபதியிடம் தெரிவித்தனர். மருத்துவமனை பணியாளர்கள் தவறு செய்து விட்டனர். உடனடியாக அதை திருத்தம் செய்து தருமாறு அவர் கூறியதையடுத்து சான்றிதழ் திருத்தம் செய்து கொடுக்கப்பட்டது. பெண் குழந்தை பிறந்ததற்கு ஆண் குழந்தை பிறந்ததாக தவறான சான்றிதழ் வழங்கப்படட சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating