அகதிகளுக்கு தற்காலிக விசா: ஆஸி. செனட் சபையின் சட்டமூலம் நிறைவேற்றம்!!
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் உட்பட்ட அகதிகளுக்கு தற்காலிக விசாவை வழங்குவதற்கான திருத்தச் சட்டமூலம் அந்நாட்டு செனட் சபையில் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்மூலம் அவுஸ்திரேலியா செல்லும் அகதிகளுக்கு சில வருடங்கள் அங்கு தங்கியிருக்கவும் தொழில் செய்யவும் வாய்ப்பு கிட்டும்.
குறிப்பாக 3 வருடங்கள் முதல் 5 வருடங்கள் வரை அவர்கள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியும் என்று திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகதிகள் விடயத்தில் முன்னர் அவுஸ்திரேலிய கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தது. இந்த நிலையில் மீண்டும் தற்காலிக விசாவை வழங்கும் வகையில், சட்டங்களில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டு அது செனட்டின் அங்கீகாரத்துக்கு விடப்பட்டது.
நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 34 வாக்குகளும், எதிராக 32 வாக்குகளும் செலுத்தப்பட்டன. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தின் படி, அவுஸ்திரேலியா சென்ற நிலையில் பப்புவா நியுகினி மற்றும் நவுரு தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்ககளில் தங்கவைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான இலங்கை சிறார்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அகதிகள், முகாமில் இருந்து வெளியேற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தற்காலிக விசாவை கொண்டவர்கள் நிரந்தர விசாவை பெற தவறும்போது அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
Average Rating