மற்றொரு கறுப்பின வாலிபர் கொலையில் தீர்ப்பு: அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்!!
அமெரிக்காவில் பெர் குஸன் நகரில் கறுப்பின வாலிபர் மைக்கேல் பிரவுன் வெள்ளைக்கார போலீஸ்காரரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் போலீஸ்காரர் மீது நடவடிக்கை தேவையில்லை என கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது கலவர மாகமாறி பல நகரங்களுக்கும் பரவியது. இச்சம்பவம் நடந்த சில நாட்களிலேயே இது போன்ற மற்றொரு சம்பவத்தால் அமெரிக்காவில் மீண்டும் போராட்டம் வெடித்தது.
நியூயார்க்கை சேர்ந்த கறுப்பின வாலிபர் எரிக்கார்னார் (40). அவர் அங்கு தடை செய்யப்பட்ட சிகரெட்டை விற்க முயன்றார். அதற்காக அவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது டேனியல் பன்டாலியோ என்ற வெள்ளைக்கார போலீஸ்காரர் அவரது கழுத்தை இறுக்கி பிடித்து கொண்டார்.
கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சு திணறி அவர் இறந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய பெரு நடுவர் குழு டேனியல் பன்டாலியோ மீது கோர்ட்டில் குற்ற விசாரணை தேவையில்லை என தீர்ப்பளித்தது.
இதனால் கறுப்பின மக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். கொதித்தெழுந்த அவர்கள் தீர்ப்பு வெளியான உடனே நியூயார்க்கின் ராக்பெல்லர் மையத்தில் நூற்றுக் கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று 30 பேரை கைது செய்தனர். அதை தொடர்ந்து நியூயார்க்கில் பல பகுதிகளுக்கும் போராட்டம் பரவியது. டைம்ஸ் சதுக்கம், பிராட்வே, பகுதிகளில் 5 ஆயிரம் பேருக்கு மேல் திரண்டு தனித்தனி குழுக்களாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த வாகனங்களில் இருந்தவர்கள் ஹாரன் அடித்தனர். எனவே, அப்பகுதி பரபரப்பாக இருந்தது.
போராட்டக்காரர்கள் தங்கள் கைகளில் கறுப்பின மக்களுக்கு ஆதரவாகவும், உயிரிழந்த வாலிபரின் பேசிய கடைசி வார்த்தையான என்னால் சுவாசிக்க முடிய வில்லை என்று கதறும் வாசகங்களையும் எழுதிய அட்டைகளை ஏந்தி இருந்தனர்.
Average Rating