கோழிக்கோட்டில் நாளை மீண்டும் முத்தம் கொடுக்கும் போராட்டம்!!
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அநாகரீக செயல்கள் நடப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து சில சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இதற்கு கண்டனம் தெரிவித்து பேஸ்புக் ஆர்வலர்கள் கடந்த மாதம் கொச்சியில் முத்தம் கொடுக்கும் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்ததை தொடர்ந்து இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முத்தம் கொடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை, புனே, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்று கேரள மாநில பேஸ் புக் ஆர்வலர்கள் கோழிக்கோட்டில் நாளை (7–ந்தேதி) மாலை 4 மணிக்கு முத்தப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
‘தெருவில் சும்பனம் 2.0’ என்ற தலைப்பில் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து பேஸ் புக்கில் தகவலை உலவவிட்டுள்ளனர். கோழிக்கோடு பீச்சில் நடப்பதாக இருந்த இந்த போராட்டம் புறநகர் பஸ் நிலையத்தில் நடக்கும் என்றும் போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர்.
இதுபற்றி கோழிக்கோடு போலீஸ் கமிஷனர் ஏ.வி. ஜார்ஜ் கூறும்போது, ‘இந்த போராட்டம் பற்றி தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. போராட்டம் நடந்தால் நடக்கட்டும். அதை வேடிக்கை பார்ப்பவர்கள் பார்க்கட்டும். போலீசார் இதில் தலையிட போவதில்லை’ என தெரிவித்துள்ளார். கொச்சி போராட்டத்தின்போது, போலீசார் இதில் தலையிட்டதாலேயே இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசப்பட்டதாகவும், அதனாலேயே இந்த போராட்டம் பல இடங்களிலும் நடந்ததாக கூறப்பட்டது.
எனவே நாளைய போராட்டத்திற்கு போலீசார் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
Average Rating