குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க இரு நாட்கள் பொது விடுமுறை!!
கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கும் மாலைதீவின் தலைநகர் மாலேயில் இரு நாட்கள் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் குடிநீர் வினியோகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
மாலைதீவு தலைநகர் மாலேயில் வியாழக்கிழமை பிற்பகல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் நீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அந்நாட்டுக்கு இந்தியா வெள்ளிக்கிழமையன்று விமானம் மூலம் குடிநீரை அனுப்பி வைத்தது. இலங்கை மற்றும் சீனாவில் இருந்தும் குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இருந்தும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கும் மாலேயில் ஆள் ஒருவருக்கு இரண்டு லிட்டர் என்ற கணக்கில் பாதுகாப்புப் படையினர் நீரை விநியோகித்து வருவதாக அங்கு வசிக்கும் இலங்கையரான முஹம்மத் ஜதீர் பிபிசியிடம் தெரிவித்தார்.
கிணற்று நீரை கழிப்பரைத் தேவைகளுக்காக மக்கள் பயன்படுத்திக் கொண்டுவருவதாகவும் அவர் கூறினார்.
சுத்திகரிப்பு நிலையத்துக்குத் தேவையான உதிரிப் பாகங்கள் கொண்டுவரப்பட்டு விட்டதாகவும், இரு தினங்களில் நிலைமை மேம்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Average Rating