ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?: ஸ்ரீரங்கத்தில் சகோதரர் சத்தியநாராயணராவ் பேட்டி!!
ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணராவ் ரஜினி ரசிகர் ஒருவரது வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சிக்கு வந்திருந்தார். பின்னர் சத்தியநாராயணராவ், ரஜினிகாந்த் வழிபடும் சிறப்பு கடவுள் ராகவேந்திர சுவாமி இருக்கும் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்துக்கு வந்தார்.
ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்டு சத்திய நாராயணராவ் வெள்ளி ரதம் இழுத்து ரசிகர்களுடன் வெள்ளி கோல் தாங்கி கோவிலை சுற்றி வந்தார்.
அப்போது சத்திய நாராயணராவிடம் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு சத்திய நாராயணராவ் கூறியதாவது:
ரஜினிக்கு அரசியல் வேண்டாம், அவர் அரசியலுக்கு வர வேண்டாம், ரஜினிக்கு பெயர் நன்றாக உள்ளது. அரசியலில் ஈடுபட்டால் நல்லவர்களும் கெட்டவர்களாகி விடுவார்கள். ரஜினியை தங்கள் இயக்கத்துக்கு வரச்சொல்லி தி.மு.க., காங்கிரஸ் உள்பட எல்லா கட்சி தலைவர்களும் கூப்பிடுகிறார்கள். ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டால் மற்ற கட்சியை திட்ட வேண்டிவரும். அதனால் ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது. தமிழ்நாடு புண்ணிய பூமி. ரஜினி தமிழ்நாட்டின் குழந்தை.
அந்த குழந்தைக்கு தமிழ்நாட்டு மக்களின் ஆசீர்வாதம் வேண்டும்‘ என்று கூறினார். காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட முயற்சிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது, ‘தமிழ் நாட்டுக்கும் தண்ணீர் வேண்டும், கர்நாடகத்துக்கும் தண்ணீர் வேண்டும, தமிழ் நாட்டிலும் தண்ணீர் கேட்கிறார்கள், கர்நாடகத்திலும் தண்ணீர் கேட்கிறார்கள்‘ இவ்வாறு அவர் கூறினார்.
சத்தியநாராயணாவுடன் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகள் கர்ணன், செந்தில், நாகர், ஸ்ரீரங்கம் ரமேஷ், காமராஜ், சண்முகம், மணிகண்டம் ஆனந்த், சமயபுரம் முருகேசன், சுரேஷ், மணி, துவாக்குடி சாமி மாரியப்பன், தென்னூர் உதயா, ராஜ் ஆகியோர் உள்பட பலர் வந்திருந்தனர். ராகவேந்திர மடத்தில் அன்னதானம் நடந்தது.
Average Rating