பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்திட அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி!!
திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்பு குறித்த ஆட்டோ விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:–
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்திடவும், கல்வி இடைநிற்றல், குழந்தை தொழிலாளர் முறை, குழந்தை திருமணம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காத்திடுதல் குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு சிறப்பு பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு பிரச்சாரத்தில் குழந்தை கல்வி இடைநிற்றலை தடுப்போம், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்போம், பெண் கல்வி ஒன்றே குழந்தை திருமணத்தை தடுக்கும், முறையற்ற வகையில் குழந்தை தத்தெடுத்தலை தடுப்போம் போன்ற சுவரொட்டிகள் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டியும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் குறித்த ஆலோசனைகள், குழந்தைகள் தத்தெடுக்கும் வழிமுறைகள், குழந்தை திருமணத்தை தடுக்கும் வழிமுறைகள் தொடர்பான மடிப்பேடுகளை பொதுமக்களிடையே வழங்கியும், மேலும் ஆட்டோவில் ஒலிபெருக்கி அமைத்து குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் தொடர்பான வாசகங்களை எடுத்துரைத்தும் அனைத்து ஒன்றியங்களிலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் குழந்தை வளர்ப்பு முறையினை நன்கு தெரிந்துகொண்டு வருங்கால நாட்டின் தூண்களாகிய குழந்தைகளை சிறந்தவர்களாக உருவாக்கிட வேண்டும். மேலும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான அவசர இலவச டெலிபோன் எண்:–1098–னை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Average Rating