திருமுல்லைவாயலில் குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவர்!!
திருமுல்லைவாயில் அனுமன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் அலெக்ஸ். இவரது மனைவி தேவி (வயது25). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
கடந்த 4 மாதத்துக்கு முன்பு நடந்த விபத்தில் தேவியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் பெற்றோர் இருந்து கவனித்து வந்தனர்.
அலெக்ஸ்–தேவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த அலெக்ஸ், மனைவி தேவியை ஓங்கி அடித்து எட்டி உதைத்தார். இதில் நிலைகுலைந்த தேவி அறையில் மயங்கி விழுந்தார்.
உடனே அலெக்ஸ் கோபத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். கணவன்–மனைவி இடையே அடிக்கடி ஏற்படும் தகராறு என்று நினைத்து தேவியை அவரது பெற்றோரும் கவனிக்கவில்லை.
நீண்ட நேரத்துக்கு பின்னர் வீட்டுக்கு வந்த அலெக்ஸ், மனைவி தரையில் சுருண்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் தேவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தேவியின் உடலை பார்த்து பெற்றோரும், குழந்தைகளும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆவடி உதவி கமிஷனர் கங்கை ராஜ், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து தேவியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அலெக்சிடம் விசாரணை நடந்து வருகிறது. குடும்ப தகராறில் மனைவியை கணவரே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating