காதல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசில் சிக்க வைத்த பள்ளி மாணவி!!
சமீபகாலமாக பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆண்களை சம்பந்தப்பட்ட பெண்களே தண்டனை கொடுப்பதும், அவர்களை போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுப்பதும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் திருச்சியில் ஒரு பள்ளி மாணவி தனக்கு தொல்லை கொடுத்த சிறுவனை போலீசில் சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கீதா (வயது 16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் தில்லைநகரில் உள்ள மேல்நிலை பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வருகிறார்.
தந்தை முருகன் கொத்தனார் வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றுவதால் கீதா நன்றாக படித்து உயர்ந்த பதவிக்கு செல்ல வேண்டும். குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என தீவிரமாக படித்து வந்தார். இந்நிலையில் கீதாவிற்கு தொல்லை காதல் வடிவில் வந்தது.
பள்ளி முடிந்ததும் கீதா அரசு பஸ்சில் ஏறி வீட்டிற்கு செல்வார். செல்லும் வழியில் பஸ் காந்தி மார்க்கெட் ஆர்ச் அருகே நிற்கும் போது அங்கு கூடையில் பழ வியாபாரம் செய்யும் 16–வயது சிறுவன் விஸ்வநாதன் கீதாவின் அழகில் மயங்கினான். தினமும் பஸ்சில் வரும் கீதாவை பார்ப்பதற்காக பழகூடையுடன் காந்தி மார்க்கெட் ஆர்ச் அருகே காத்திருப்பான்.
பஸ் வந்ததும் விஸ்வநாதன் உற்சாகமாகி விடுவான். கீதாவை நோக்கி காதல் பார்வை வீசுவான். முதலில் சாதாரணமாக நினைத்த கீதாவிற்கு விஸ்வநாதனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாளடைவில் கீதா தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக விஸ்வநாதன் பாட்டு பாடுவது, சைகை காட்டுவது என ஈடுபட்டான். இது கீதாவிற்கு தொல்லையாக இருந்தது. படித்து பெரிய பதவிக்கு வர வேண்டும் என நினைக்கையில் இது என்ன புது தொல்லை என கீதா அதிர்ச்சி அடைந்தார். தன்னை தொல்லைப்படுத்தக்கூடாது என விஸ்வநாதனை கீதா எச்சரித்தார்.
ஆனாலும் விஸ்வநாதன் மாறவில்லை. நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்ததும் கீதா பஸ்சில் சென்றார். காந்தி மார்க்கெட் ஆர்ச் அருகே பஸ் நின்ற போது மீண்டும் விஸ்வநாதன் தனது விஸ்வரூபத்தை காட்டினான். உடனே பொங்கி எழுந்த கீதா பெற்றோரிடம் கூறி காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் விஜய பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விஸ்வநாதனை கைது செய்தார். அதன் பிறகு விஸ்வநாதன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான். விஸ்வநாதன் ஆழ்வார் தோப்பு பகுதியை சேர்ந்தவன் ஆவான். தந்தை இறந்து விட்டார். பழத்தை விற்று குடும்பத்துக்கு உதவியாக இருந்த விஸ்வநாதன் காதல் படுத்தியப்பாட்டால் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
Average Rating