குவைத் பெண்கள் முதல் முறையாக வாக்குரிமையோடு தேர்தலில் பங்கேற்பு
குவைத் பெண்கள் முதல் முறையாக தேர்தலில் பங்கேற்று வியாழக்கிழமை வாக்களித்தனர். 50 உறுப்பினர்களைக் கொண்ட குவைத் நாடாளுமன்றத்துக்கு வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடந்தது. முதல் முறையாக பெண்களும் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே வளைகுடா நாடு குவைத். 25 தொகுதிகள், ஒவ்வொரு தொகுதிக்கும் இரு உறுப்பினர்கள் என 50 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்தத் தேர்தலில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ இதுவரை பெண்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு, தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் முதல் முறையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் இந்த முடிவுக்கு பழமைவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் இம்முடிவு அமல்படுத்தப்பட்டுள்ளது, பழமைவாத நாடான குவைதில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை காட்டுகிறது.
அடுத்த நாடாளுமன்ற அமர்வில் பெண் எம்.பி.களும் இடம்பெறுவர் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் குவைதின் முதல் பெண் வேட்பாளர் ஜெனான் போஷெஹ்ரி. 2005 மார்ச்சில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டவர் இவர்.