ஆபாசமாக பேசியதால் மாணவி தற்கொலை முயற்சி: மாணவன் கைது!!
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள மங்கம்மாள்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, கூலி தொழிலாளி. இவரது மகள் சங்கரேஸ்வரி (வயது15). இவர் டி.கல்லுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.
சங்கரேஸ்வரி படிக்கும் வகுப்பில் எழுமலையை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் கார்த்திக் (15) என்பவரும் படித்து வருகிறார். கார்த்திக் அடிக்கடி மாணவி சங்கரேஸ்வரியை கேலி, கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி பலமுறை எச்சரித்தும் கார்த்திக் கேலி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த சங்கரேஸ்வரியிடம் கார்த்திக் தகராறு செய்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதை சங்கரேஸ்வரி தனது பள்ளி ஆசிரியை அப்சரா பானுவிடம் கூறியுள்ளார். ஆனால் அவரும் மாணவன் கார்த்திக்கை கண்டிக்காமல் ஆதரவாக பேசியுள்ளார். மேலும் சங்கரேஸ்வரியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
ஆசிரியையும், மாணவனும் ஆபாசமாக பேசியதால் மனமுடைந்த சங்கரேஸ்வரி பள்ளி அருகே இருந்த அரளி விதையை அரைத்து குடித்து பள்ளியில் மயங்கி விழுந்தார். இது குறித்து சக மாணவ–மாணவிகள் கொடுத்த தகவலின்பேரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சங்கரேஸ்வரியை ஆசிரியர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு நிலைமை மோசமானதால் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சங்கரேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாதமுத்து வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் ஆபாசமாக பேசிய கார்த்திக்கை கைது செய்தார். ஆசிரியை அப்சரா பானுவிடம் விசாரணை நடந்து வருகிறது. பள்ளியிலேயே மாணவி தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating