ஒட்டன்சத்திரம் அருகே சொத்து தகராறில் விவசாயியை அடித்து கொன்ற மனைவி–மாமனார்!!
ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சாலைப்புதூர் லக்கையன்கோட்டையை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் அசோகன் (வயது 47). விவசாயி. இவருக்கும் கரியாம்பட்டியை சேர்ந்த ராமசாமி மகள் சாமியாத்தாள் (35) என்பவருக்கும் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. காவியா (15) என்ற மகளும், சுபாஷ் (12) என்ற மகனும் உள்ளனர்.
கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சாமியாத்தாள் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் கரியாம் பட்டியில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். அதன்பிறகு பலமுறை குடும்பம் நடத்த வருமாறு அசோகன் அழைத்தும் அவர் வரவில்லை.
நேற்று தனது நண்பர் கதிரேசனை அழைத்துக்கொண்டு ஒரு வாடகை காரில் மனைவியை கூப்பிடுவதற்காக சென்றார். காரை ராமகிருஷ்ணன் (42) என்பவர் ஓட்டி வந்தார். தனது மாமனார் தோட்டம் அருகே வந்தபோது கதிரேசனையும், ராமகிருஷ்ணனையும் தூரத்திலேயே நிற்கவைத்து விட்டு அசோகன் மட்டும் அங்கு சென்றார்.
அப்போது தனக்கு சேரவேண்டிய சொத்தின் பாகத்தை எழுதி தரும்படி மாமனாரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராமசாமி, சாமியாத்தாள், இவரது தம்பி தங்கராஜ் (32) ஆகியோர் மண்வெட்டி மற்றும் கடப்பாரையால் அசோகனை பயங்கரமாக தாக்கினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு தோட்டத்துக்கு வந்த கதிரேசனும், ராமகிருஷ்ணனும் கொலை சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கள்ளிமந்தயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பரமசிவம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராமசாமியையும், சாமியாத்தாளையும் கைது செய்தனர். தப்பி ஓடிய தங்கராஜை தேடி வருகின்றனர்.
Average Rating