மதுபோதையில் இளம்பெண்ணின் கன்னங்களை கடித்த அரசு ஊழியர்!!
தாராபுரம் டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருபவர் சின்ன மாசாணம் (வயது 38). இவர் நேற்று பணி முடிந்து வீடு திரும்பும் போது மது அருந்தினார். போதை தலைக்கேறியதும் வீட்டுக்கு புறப்பட்டார்.
தாராபுரம் காமன் கோவில் வீதிக்கு சென்ற போது அங்கு வீட்டுக்கு முன்பு பார்வதி (வயது 30 பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாசல் சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அங்கு வந்த சின்ன மாசாணம் சுத்தம் செய்து கொண்டிருந்த அவரை கண்டதும் அங்கேயே நின்று விட்டார்.
காமம் தலைக்கேறியதும் சின்னமாசாணம் திடீரென்று பார்வதியை பின்புறமாக கட்டிப்பிடித்தார். இதை சற்றும் எதிர்பாராத பார்வதி அதிர்ச்சியடைந்தார்.
சின்ன மாசாணத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சித்தார். அதற்குள் பார்வதிக்கு முத்தமிட சின்னமாசாணம் முயற்சி செய்தார். அவரிடமிருந்து விடுபட பார்வதி முயற்சி செய்தபோது சின்ன மாசாணம் அவரது 2 கன்னங்களையும் கடித்து விட்டார்.
இதில் படுகாயமடைந்த பார்வதி காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என்று சத்தமிட்டார். பார்வதியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் பார்வதியை கீழே தள்ளி விட்டு சின்ன மாசாணம் தப்பி ஓட்டம் பிடித்தார்.
காயமடைந்த பார்வதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பார்வதி தாராபுரம் போலீசில் சின்னமாசாணம் மீது பார்வதி புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் நாச்சிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுகுறித்த தகவலறிந்ததும் சின்னமாசாணம் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலும் சின்னமாசாணம் அரசு ஊழியர் என்பதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். இந்த சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Average Rating