மகளை தாக்கியபோது தடுக்க முயன்ற மாமனாரை அடித்து கொன்ற மாப்பிள்ளை கைது!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் தூக்கந்தோட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது60). சென்னையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். கடந்த 1 மாதத்துக்கு முன் தூக்கந்தோட்டுக்கு வந்தார்.
ரவிக்குமாரின் மனைவி மாதவிகுட்டி. இவர்களது மகள் ரமாதேவி. இவரது கணவர் ராஜீவ் (36). ராஜீவ் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து கூலிவேலை செய்து வருகிறார்.
நேற்று மாலை ராஜீவுக்கும் ரமாதேவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜீவ் மனைவியை அடித்து உதைத்தார். வலி தாங்காமல் ரமாதேவி அலறி சத்தம்போட்டார். கண்முன் மகள் அடிபடுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் ஓடிச்சென்று தடுக்க முயன்றனர்.
ஆத்திரத்தில் இருந்த ராஜீவ் மாமனாரை அடித்து கீழே தள்ளி விட்டார். மாமியாரையும் அடித்து உதைத்தார். கீழே விழுந்த ரவிக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது ரவிக்குமாரும், மாதவிகுட்டியும் படுகாயத்துடன் கிடந்தனர்.
அவர்களை மீட்டு கன்னியம்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவிக்குமார் பரிதாபமாக இறந்தார். மாதவிகுட்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஒற்றப்பாலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து ராஜீவை கைது செய்தனர்.
Average Rating