நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரின் பதவி பறிப்பு!!
நுவரெலியா பிரதேச சபையில் மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவரின் பதவி பறிபோவதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்ட ராமையா மலர்வாசகம், கதிர்வேல் கல்யாணகுமார் ஆகியோரின் பதவி பறிபோவதாக தேர்தல் ஆணையாளர் வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ளாரென அவர் குறிப்பிட்டார்.
கட்சித் தாவிய இவ்விருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது அவர்கள் சார்பில் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தாகவும் வழக்கின் முடிவு கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை குழுவிற்கு சாதகமாக அமைந்துள்ளதெனவும் லோரன்ஸ் குறிப்பிட்டார்.
பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பதிலாக காளிமுத்து பரமசிவம், அருணாசலம் நல்லமுத்து ஆகிய இருவரையும் நியமிக்க மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.
புதிய உறுப்பினர்களின் பெயர்களை மலையக மக்கள் முன்னணி தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பின் இருவரும் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்கள் என்றும் லோரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இன்று கட்சி தாவும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த முடியாதிருக்கும் சூழ்நிலையில் மலையக மக்கள் முன்னணி அதனை செய்து வெற்றி கண்டிருப்பது கட்சி தாவுவோருக்கு நல்ல பாடம் என செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்தார்.
Average Rating