வேலை வாங்கி தருவதாக கூறி அக்காள்–தங்கை துபாயில் விற்பனை: புரோக்கர்கள் 2 பேர் கைது!!
ஐதராபாத் அருகே உள்ள பார்காஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாத்திமா, இந்தியாஸ். தாய்–மகளான இவர்கள் குண்டூரைச் சேர்ந்த 30 மற்றும் 27 வயது நிரம்பிய அக்காள், தங்கைகளை அணுகி துபாயில் நல்ல சம்பளத்தில் குழந்தைகளை கவனிக்கும் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்கள்.
குடும்ப கஷ்ட நிலை தீர இருவரும் சம்மதித்தனர். இதற்காக அவர்களிடம் ரூ.2 லட்சம் பணம் வாங்கி கொண்டனர்.
பின்னர் இருவரையும் துபாய் அழைத்துச் சென்று அம்ஜத், சோபியா ஆகியோர் மூலம் சவுதியில் உள்ள அரேபியரிடம் விற்று விட்டனர்.
அங்கு அவர்களை அரேபியர் விபசாரத்துக்கு பயன்படுத்தினார். விபசாரத்துக்கு மறுத்த அவர்களை அரேபியர் அறையில் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்தார். அப்போதுதான் வேலை வாங்கி தருவதாக கூறி தாங்கள் விற்கப்பட்டது அவர்களுக்கு தெரிந்தது.
சித்ரவதையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அக்காளை அரேபியன் சுட்டு விட்டான். அவர் ஐதராபாத் திரும்பி வந்து தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து புரோக்கர்களாக செயல்பட்ட பாத்திமா, இந்தியாசை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் பல பெண்களை இப்படி மோசடி செய்து துபாயில் விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் துபாயில் தவித்த தங்கையையும் மீட்டனர்.
மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் கிடைக்கும் என்று கூறியதால் குடும்பத்தை காப்பாற்ற துபாய் சென்றோம், ஆனால் எங்களை விபசாரத்தில் ஈடுபடச் சொல்லி அடித்து சித்ரவதை செய்தார்கள் என்று சகோதரிகள் கண்ணீர் மல்க கூறினார்கள்.
Average Rating