அனுமதி இல்லாமல் சீனாவில் இருந்து மருந்து பொருட்கள் இறக்குமதி: 12 பேர் கைது!!
மத்திய அரசின் மருந்துக் கழகம் என்ற நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்வோர், இந்த மருந்து கழகத்தில் முறையான அனுமதியினை பெறவேண்டும்.
இந்த அனுமதியினை பெற்ற பின்னர், எவ்வளவு மருந்து பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது? அந்த மருந்து பொருட்களின் பெயர், எந்த நோய்க்கு பயன்படுத்தக் கூடியது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தனி கணக்காக பராமரித்து, அதற்குரிய இறக்குமதி கட்டணத்தை மருந்து கழகத்திடம் செலுத்தவேண்டும்.
ஆனால், சென்னையில் 4 தொழில் அதிபர்கள் எந்த ஒரு அனுமதியினையும் பெறாமல், சீனாவில் இருந்து மருந்துகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்துவதாக சி.பி.ஐ. போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த புகார்கள் மீது சி.பி.ஐ. போலீசார் ரகசிய விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, சீனாவில் இருந்து, கப்பல் மூலம் சட்டவிரோதமாக மருந்துகளை கொண்டு வந்து, சென்னை துறைமுகம் வழியாக நாட்டிற்குள் கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்பின்னர், இந்த சட்டவிரோத நடவடிக்கையில் தொழில் திபர்களுக்கு உதவிய ‘ஷிப்பிங்’ நிறுவனங்களையும் அதிகாரிகள் வேவு பார்த்தனர்.
இதைதொடர்ந்து, நேற்று அதிரடியாக 4 தொழில் அதிபர்கள் மற்றும் ‘ஷிப்பிங்’ நிறுவனங்களின் நிர்வாகிகள் 8 பேரையும் அடுத்தடுத்து சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். அதன்படி, சென்னையை சேர்ந்த ராம்லால், சஞ்சய்கன்வி, சச்சின் ஜெயின், சோகன்சந்த் என்ற 4 தொழிலதிபர்கள் உட்பட தனியார் நிறுவனங்களை சேர்ந்த 8 நிர்வாகிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் அனைவரும், சென்னையிலுள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் புழல் ஜெயிலில் நேற்று அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 29-ந்தேதிவரை கோர்ட்டு காவலில் அடைக்க நீதிபதி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். அவர்களில் சிலர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். அவற்றின் மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Average Rating