நடிகை தன்ஷிகாவிடம் குடிபோதையில் ரகளை: வாலிபர்கள் கைது!!!
‘அரவான்’, ‘பரதேசி’ படங்களில் நடித்து பிரபலமானவர் தன்ஷிகா. ‘யாயா’, ‘விழித்திரு‘, ‘பேராண்மை‘, ‘மாஞ்சா வேலு‘, படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘காத்தாடி‘ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள வேகமன் பகுதியில் நடக்கிறது. பாடல் காட்சியொன்றை அங்கு படமாக்குகின்றனர். இதில் நடிப்பதற்காக தன்ஷிகா தனது மானேஜருடன் சென்று இருந்தார்.
படப்பிடிப்புக்கான ஆயத்த பணிகளை படக்குழுவினர் செய்தனர். லைட்கள் பொருத்தப்பட்டது. தன்ஷிகா கேரவனில் உட்கார்ந்து இருந்தார். அப்போது சில வாலிபர்கள் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு கும்பலாக வந்தனர். எல்லோரும் குடித்து இருந்தார்கள்.
கேரவனில் இருந்த தன்ஷிகாவை பார்க்க வேண்டும் என்றனர். அவரும் வெளியே வந்தார். உடனே தன்ஷிகாவுடன் சேர்ந்த நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். மானேஜர் அதற்கு சம்மதிக்கவில்லை.
இதனால் போதையில் இருந்தவர்கள் தகராறு செய்தனர். தன்ஷிகா கையை பிடித்து இழுக்க முயன்றார்கள். மானேஜரையும் அடித்தனர். படப்பிடிப்பு குழுவினர் அங்கு ஓடோடி வந்தனர். போதையில் ரகளை செய்தவர்களை பிடித்துக் கொண்டனர்.
உடனே, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்ததும் போதை ஆசாமிகளை அவர்களிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது.
இதுகுறித்து படத்தின் டைரக்டர் கல்யாண் கூறும் போது, படப்பிடிப்பில் குடிபோதையில் சிலர் ரகளையில் ஈடுபட்டது உண்மைதான். அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்து விட்டோம் என்றார்.
Average Rating