முன்பதிவு செய்தவருக்கு இருக்கை ஒதுக்காத ரெயில்வே நிர்வாகத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்!!
டெல்லியை சேர்ந்த குமார் சதுர்வேதி என்பவர் தனது குடும்பத்துடன் பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் இருந்து டெல்லி செல்வதற்காக கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் ஏ.சி. வகுப்பு இருக்கைகளுக்கான ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தார்.
ஆரம்பத்தில் காத்திருப்போர் பட்டியலில் அவரது முன்பதிவு நிலவரம் இருந்தது, பின்னர், இதர பயணிகளில் சிலர் தங்களது முன்பதிவை ரத்து செய்ததையடுத்து அவரது டிக்கெட்களுக்குண்டான இருக்கைகள் உறுதி செய்யப்பட்டன
.
ஆனால், பயண தினத்தன்று கட்டிஹார்-அம்ரிஸ்டர் ரெயிலில் ஏறிய குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இருக்கைகளை ஏற்பாடு செய்துதர ஏ.சி. வகுப்பு பெட்டியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் தவறிவிட்டார்.
தனது டிக்கெட் ‘கன்பர்ம்’ ஆகிவிட்டதை குமார் தெரிவித்தும், அது தொடர்பான தகவல் தனக்கு கிடைக்கவில்லை என பரிசோதகர் தீர்மானமாக தெரிவித்து விட்டதால் குமாரும் அவரது குடும்பத்தினரும் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை நின்றபடியே பயணிக்க நேர்ந்தது.
இதனால், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட உடல் சிரமம் மற்றும் மன உளைச்சலுக்கு உரிய இழப்பீட்டு நிவாரணம் வழங்கும்படி ரெயில்வே துறைக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ரெயில்வே நிர்வாகம், ’குமாரின் முன்பதிவு விபரங்களும் இருக்கைகள் உறுதி செய்யப்பட்டதும், வடக்கு மண்டல ரெயில்வே நிர்வாகத்துக்கு உட்பட்டவையாகும்.
ஆனால், அவர் பயணம் செய்த தினத்தன்று இருக்கை வசதி செய்துதர மறுத்த டிக்கெட் பரிசோதகர் மத்திய கிழக்கு மண்டல ரெயில்வே துறைக்குட்பட்டவர். அவர் செய்த தவறை சுட்டிக்காட்டி மத்திய கிழக்கு மண்டல ரெயில்வே நிர்வாகத்துக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இழப்பீடு வழங்குவதற்கு, வடக்கு மண்டல ரெயில்வே நிர்வாகம் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாது’ என்று தெரிவித்தது.
இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நுகர்வோர் நீதிமன்றம், ‘நிர்வாக வசதிக்காக ரெயில்வே துறையை 9 மண்டலங்களாக பிரித்து வைத்திருப்பதை காரணம் காட்டி, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பயணிக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகைக்கு பொறுப்பேற்க முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒட்டுமொத்த கண்ணோட்டதில் ரெயில்வே துறையின் சேவை குறைபாடாகத்தான் இந்த சம்பவத்தை கருத வேண்டியுள்ளது. எனவே, மனுதாரருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
Average Rating