இந்தியா – இலங்கை இடையே பேச்சு!!
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு காண மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில்,
“மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாட்டு மீனவர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த குழுவை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு காண, இது சம்பந்தமான அமைப்புகளிடம் மத்திய அரசு முனைப்புடன் பேச்சுவார்தை நடத்தி வருகிறது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் கடந்த ஜூலை 29ஆம் திகதி டில்லியில் நடைபெற்றது.
அப்போது, பாதுகாப்பான வகையில் மீன்படித் தொழிலை மேற்கொள்வதற்கு இரு நாட்டு மீனவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக ஒப்புக் கொண்டனர். இந்தக் குழுவின் அடுத்தக் கூட்டம் கொழும்பில் நடைபெறும்´ என்று தெரிவித்துள்ளார்.
மக்களவையில்… இந்நிலையில், தமிழக மீனவர் பிரச்சினையை மக்களவையில் அரக்கோணம் தொகுதி அதிமுக உறுப்பினர் ஜி.ஹரி எழுப்பியிருந்தார். அதற்கு வெளியுறவு இணை அமைச்சர் வி.கே. சிங் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலின் விவரம்:
இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப் படகுகளைப் (பாட்டம் டிராலிங்) பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாக அந்நாட்டு அரசு, இந்திய அரசிடம் தெரிவித்துள்ளது. உரிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளின்படி இலங்கையில் அந்த வகை மீன்பிடிப் படகுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 12-ஆம் திகதி நிலவரப்படி, இலங்கையின் கட்டுப்பாட்டின் கீழ் 87 இந்திய மீன்பிடிப் படகுகள் உள்ளன.
இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை எடுத்துள்ளது. மீனவர் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வைக் கண்டறிவதற்கு மத்திய அரசு விரைவாக செயலாற்றி வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Average Rating