ஷீலா தீட்சித்துக்கு விதித்த ரூ.3 லட்சம் அபராதத்தை தள்ளுபடி செய்ய டெல்லி ஐகோர்ட் மறுப்பு!!
கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளராக விஜேந்தர் குப்தா போட்டியிட்டார்.
அப்போது, நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ஷீலா தீட்சித் மற்றும் அவரது தலைமையிலான டெல்லி அரசின் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை விஜேந்தர் குப்தா அடுக்கடுக்காக அள்ளி வீசினார்.
இதனையடுத்து, டெல்லி கோர்ட்டில் விஜேந்தர் குப்தா மீது ஷீலா தீட்சித் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது தொடர்ந்து ஆஜராக தவறிய ஷீலா தீட்சித்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து டெல்லி கோர்ட் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.
இந்த தொகையில் 2 லட்சம் ரூபாயை டெல்லி சட்ட வாரியத்துக்கும் ஒரு லட்சம் ரூபாயை விஜேந்தர் குப்தாவுக்கும் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஷீலா தீட்சித் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கின் மனுதாரரான ஷீலா தீட்சித் ஒவ்வொரு விசாரணையின்போதும் ஆஜராக வேண்டியதில்லை. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி அன்று நடைபெற்ற விசாரணையின்போது ஷீலா தீட்சித்தின் வக்கீல் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். 30-ம் தேதி விசாரணையின்போது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றத்தில் ஷீலா தீட்சித் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையெல்லாம் நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. எனவே, இந்த அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த முறையீட்டில் ஷீலா தீட்சித் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின்போது, இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்த ஐகோர்ட் அபராதத் தொகையை ரத்து செய்ய முடியாது என்று அறிவித்து விட்டது.
கீழ் கோர்ட்டு விதித்த அபராதத்தை நாங்கள் ரத்து செய்ய முடியாது. இது தொடர்பான விசாரணை நாளை (20-ம் தேதி) கீழ் கோர்ட்டில் நடைபெறவுள்ளது. அப்போது ஷீலா தீட்சித் நேரில் ஆஜராகி விசாரணை கோர்ட் மூலமாகவே இந்த விவகாரத்துக்கு நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என்று தெரிவித்த டெல்லி ஐகோர்ட் ஷீலா தீட்சித்தின் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
Average Rating