கச்சத்தீவை மீட்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்ததற்காக மொத்தம் 66 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமான 81 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் ஆழ்கடலில் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 102 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இங்கிலாந்து கடற்படை கைது செய்து, டியாகோ கார்சியோ தீவில் சிறை வைத்துள்ளனர்.
மொத்தமாக இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து கடற்படையால் கைது செய்யப்பட்டு 221 தமிழக மீனவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ் பெருவிழா நெருங்கி வரும் நிலையில் 200க்கும் மேற்பட்ட மீனவர் உறவுகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்களது உறவினர்கள் தவித்து வருகின்றனர்.
பாரம்பரிய மீன்பிடிப்பகுதியிலும் மீன்பிடித்தால் இலங்கை கடற்படை சிறை பிடிக்கிறது, சர்வதேச கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டால் பன்னாட்டு கடற்படைகள் கைது செய்கின்ற நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்காலமே கேள்விகுறியாகி கொண்டிருக்கிறது.
கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்களின் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை.
இது தமிழ்நாட்டு பிரச்சினைதானே என்று வழக்கம் போல அலட்சியம் காட்டாமல் 221 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யவும் கச்சத்தீவை மீட்டு தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்காலத்தையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற, இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Average Rating