66 தமிழக மீனவர்களின் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும்!!
இலங்கை சிறையில் உள்ள 66 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்வதை இந்திய மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த 16–ம் திகதி நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக மனித நேய அடிப்படையில் சிறையில் இருக்கும் 30 இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களது 19 படகுகளையும் எதிர்வரரும் 22–ம் திகதி விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தேன்.
அதன் மூலம் அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பி குடும்பத்தினருடன் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட முடியும். அதே நேரத்தில் இதற்கு மாற்றாக கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட வசதியாக இலங்கை சிறையில் வாடும் 66 தமிழக மீனவர்களையும், அவர்களது 81 படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இதற்கிடையே மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தில் இருந்து ஒரு கடிதம் எங்களுக்கு கிடைத்தது. இலங்கை சிறையில் உள்ள 66 தமிழக மீனவர்களை மட்டும் விடுவிக்க இலங்கை அரசு ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படகுகள் விடுவிப்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. தற்போது இலங்கை அரசு படகுகளை விடுவிக்க விரும்பாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி தமிழக அரசு பெருந்தன்மையுடன் 30 இலங்கை மீனவர்களை வருகிற 22–ம் திகதி விடுதலை செய்கிறது. அதே நேரத்தில் இலங்கை சிறையில் உள்ள 66 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும், இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Average Rating