இலவச கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 10 பேருக்கு பார்வை பறிபோனது!!
இமாச்சல பிரதேசத்தில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு ஆபரேசன் செய்த 10 பேருக்கு பார்வை பறிபோனது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள காகோ மகால் கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தினர் இலவச கண் புரை சிகிச்சை முகாம் ஒன்றை நடத்தினர். இதில் சிகிச்சை பெற்ற 60 பேரில் 14 பேர் அடுத்த நாளே தங்கள் கண் பார்வையை முற்றிலுமாக இழந்தனர். பல்வேறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவர்கள் பார்வையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் கடந்த மாதம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடந்த தொடர் போராட்டங்களால், அரைகுறை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் விவேக் ஹராரா கைது செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், தற்போது மேலும் இது போன்ற ஒரு சம்பவம் இமாசல பிரதேசத்தில் நடந்திருக்கிறது.
இமாச்சலப் பிரதேசம் காங்ரா மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 10 பேர் பார்வையிழந்துள்ள விவரம் இப்போது தெரிய வந்துள்ளது.
காங்ராவில் நடந்த கண்சிகிச்சை முகாம், சுகாதாரமற்ற முறையிலேயே நடந்திருப்பதாக செய்தி பரவியதையடுத்து. காங்ரா நிர்வாகம் இதுகுறித்து விவரங்கள் சேகரிக்க இமாச்சல் பிரதேச நலத்துறை அதிகாரி எஸ்.கே.ஷர்மாவை நியமித்துள்ளது. இவர் இச்சம்பவம் குறித்து தகவல்களை சேகரித்து அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க உள்ளார்.
Average Rating