சிறுமியர் காப்பகத்தில் இருந்த 17 வயது பெண்ணை பெற்றோருடன் சேர்த்து வைத்த டெல்லி போலீசார்!!
டெல்லியில் உள்ள சிறார் மற்றும் சிறுமியர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து, அவற்றை ஒரு தொகுப்பாக தயாரித்து, நாட்டில் உள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் துறையுடன் பகிர்ந்துக் கொள்ளுமாறு தேசிய குழந்தைகள் கடத்தல் தடுப்பு அமைப்பு அறிவுறுத்தியிருந்தது.
இதனையடுத்து, டெல்லியின் மதன்பூர் டபாஸ் பகுதியில் உள்ள அஷ்ரயா என்ற அரசு காப்பகத்தில் தங்கியிருப்பவர்கள் பற்றிய விபரங்களை சேகரிக்க சில அதிகாரிகள் சென்றனர். அப்போது, அங்கிருந்த 17 வயது பெண் ஒருவர் அவர்களை கண்டதும் திடீரென்று சோகமாகி, ஒதுங்கி, ஒதுங்கி ஓரமாக செல்லத் தொடங்கினார்.
சந்தேகப்பட்டு அருகில் அழைத்து அவர்கள் விசாரித்தபோது, அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் நடைபெற்ற துயரமான பிண்ணனி சம்பவம் தெரியவந்தது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் உள்ள மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த அந்தப் பெண், திருவிழா மற்றும் பொருட்காட்சிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று பலூன் விற்கும் பெற்றோருடன் சென்று வியாபாரம் செய்து வந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம், இந்தப் பெண்ணை சந்தித்த ஒருவன் டெல்லிக்கு அழைத்துச் சென்று வசதியான இடத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி அழைத்து வந்துள்ளான். 10 நாட்கள் அந்தப் பெண்ணை தனியாக ஒரு வீட்டில் தங்கவைத்து தனது ஆசைகளை தீர்த்துக் கொண்ட பின்னர், டெல்லி வீதியில் நிற்கதியாக தவிக்கவிட்டு அந்த நபர் தலைமறைவாகி விட்டான்.
தனியாக தவித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை கண்ட டெல்லி போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அஷ்ரயா காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்தப் பெண் கூறிய இந்த தகவல்களை சேகரித்த டெல்லி போலீசார் உடனடியாக லூதியானா போலீசாரை தொடர்பு கொண்டனர்.
இதனையடுத்து, லூதியானாவில் இருந்து அந்தப் பெண்ணின் பெற்றோர் உடனடியாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டனர். விதி வசத்தால் பல்வேறு சோதனைகளை அனுபவித்துவிட்டு, இங்குள்ள அரசு காப்பகத்தில் தங்களது அன்பு மகள் அனாதைப் போல் கிடப்பதை பார்த்து கண்ணீர் விட்ட அவர்கள், அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறி, தேற்றி தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
Average Rating