2 குழந்தைகளை கணவர் கடத்தியதாக மனைவி நாடகம்: போலீசார் விசாரணையில் அம்பலம்!!
கருங்கல் அருகே படுவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சி (வயது 35). இவருக்கும் தக்கலையைச் சேர்ந்த சிம்சன் என்ற கட்டிட தொழிலாளிக்கும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது)
இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரை பிரிந்து ஜான்சி படுவூரில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். 2 குழந்தைகளும் தாயுடன் இருந்து வந்தன.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜான்சி கருங்கல் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், குடும்ப தகராறு காரணமாக தனது 2 குழந்தைகளையும் கணவர் சிம்சன் கடத்திச் சென்று விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருந்தார்.
இதுபற்றி கருங்கல் போலீசார் ஜான்சியிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது உறவினர்களிடம் விசாரித்தபோது, குழந்தைகளை கடத்தியதாக ஜான்சி நாடகமாடியது தெரியவந்தது.
அவரது 2 குழந்தைகளில் ஒரு குழந்தை விடுதியில் தங்கி படிப்பதும், இன்னொரு குழந்தை ஜான்சியின் உறவினர் வீட்டில் இருந்து படிப்பதும் தெரிய வந்தது. கணவர் மீது பழி போடுவதற்காக ஜான்சி பொய் புகார் கூறியது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Average Rating